Sunday, March 2, 2014

ஆஸ்திரேலியா

கேள்விக்குறியாகும்
டோனி அப்பட்டின் ஆட்சியின் மாட்சி ?
கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

இத்தால் சகலருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால்….

டோனி அப்பட்டின் ஆட்சியில் நடக்கும் அதீத மாற்றங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை  உருவாக்கி வருகின்றன. அவரது செயல் பாடுகள் உள்ளூரிலும் உலக அரங்கிலும் பல  நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றி வருகின்றன. ஏனைய உலக நாடுகளைப் போலவே அரசியலில் அடுத்த தலை முறையை வளர்க்கத் தவறியதால், அடுத்த தலைமைக்கு ஆட் பஞ்சம் ஏற்பட்டு விட்டதால் டோனி அப்பட்டின் தலைமையை ஆஸ்திரேலிய மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உருவாகி உள்ளது.


ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆன டோனி அப்பட்டின் ஆட்சி இன்று என்ன நிலையில் இருக்கிறது?

வெளி விவகாரம்
சீன , ஜப்பானிய உறவு விரிசலில் மூக்கை தேவை இல்லாமல் நுழைத்திருப்பது, வெளிப்படையாக அமெரிக்கவை சார்ந்து ஜப்பானை  ஆதரித்து இருப்பது , வெளி விவகார அமைச்சர் சீனாவை விமர்சித்திருப்பது ஆகியவை திருப்தி தருவதாக இல்லை.

பாலஸ்தீனியத்தை முற்றுமாக மறந்து, சர்வேதச சட்ட நீதி மன்றத்தை அலட்சிய படுத்தி யூத குடியிருப்புகளுக்கு அக்கிர்மிக்கப் பட்ட இடங்களில் அங்கீகாரம் வழங்குதல் போன்றவை சர்ச்சசைக்குரிய செயல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ன.

படகுகளை  திருப்பி விட உங்கள் அனுமதி தேவை இல்லை என்று சொல்லி இந்தோனேசியாவை அவமதித்து ஆகி விட்டாயிற்று. உளவு பார்க்கும் விடயத்தில் சொதப்பல்களை செய்து, கால் நடை வியாபாரத்துக்கும் ஆப்பு இழுத்தாகி விட்டது.

பப்புவா நியூ கினியா தலைமையை பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டியதுடன் மனுஸ் தீவில் உள்ள உள்ளூர் தொழில்களை பயன் படுத்துவதாக சொன்ன வாக்கையும் மீறி விட்டோம்.

கால நிலை மாற்றம்
கார்பன் வரி விதிப்பை விலக்கியிருப்பது , கால நிலை மாற்றம் தொடர்பான அமைப்புகளையும், சுத்தமான சக்தி  நிதி நிறுவனம் அகியவற்றை  மூடியிருப்பது, மற்றும் வோர்சோ   கால நிலை மாற்றம் தொடர்பான பேச்சு  வார்த்தைகளில் எந்த ஒரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாமை, பசுமை காலநிலை நிதியத்திற்கு நிதி ஒதுக்காமை போன்றவை உலக அளவில் விமர்சிக்கப் பட்டவையாகும்.
கடன்
ஐம்பது  பில்லியன் கடன் என்ற லேபரிடம், ’உபரி நிதி’, கடன் அடைத்தல், வரவுக்குள் செலவு   என்று கூவி கூவி விற்று வாக்குகளை வாங்கிய பின் தற்போது 200 பில்லியனுக்கு கடனை உயர்த்திக் கோருவது அந்தர் பல்டியாகும்.
கல்வி
கல்வியே , பொருளாதாரத்தை , உற்பத்தியை, வாழ்க்கை தரத்தை, நல்வாழ்க்கையை பெருக்கும் என்று சமூக  ஆய்வுகள் கரடியாய் கத்தினாலும்  கல்விக்கு  என வழங்கப் படும்  நிதியை முடிவுக்கு கொண்டு வருவது என்று தீயாய் வேலை செய்யும் கல்வி  அமைச்சகம்.
சமூக அமைப்புகள், இலாப நோக்கின்றி செயல் படும் அமைப்புகள், தரும ஸ்தாபனங்களுக்கு வழங்கப்படும்  நிதியில் ஆணியை பிடிங்கியாயிற்று.
தொழில் துறை
சுரங்க வரிகளை சுரங்கத் தொழில் சூடு பிடிக்கும் நேரத்தில்   நீக்கி, எதிர்கால வருமானத்தில் மண்ணை போட்டாயிற்று.
கார் தொழிற்சாலைகளுக்கு  உரிய உதவிகள்  வழங்கப்படாததால்  மறைமுகமாக இத்துறையில் ஈடு பட்டுள்ள 230,000 பணிகளுக்கு சங்கு ஊதியாகி விட்டது.
குவாண்ட்டஸ் ஏர்லைன் விரைவில் வெளி நாட்டு  நிறுவனமாகும் சாத்தியம் பக்கத்தில் வந்தாகி விட்டது.
தேசிய அகலக் கற்றை திட்டம் உடைப்பில் போடப் பட்டு விட்டது.

மனித உரிமை
மனித உரிமை மீறல் என்று உலகளாவிய  நகைப்புக்கு இடமாகும் அளவுக்கு அகதிகள் விடயத்தை விபரம் பத்தாமல்  சிறுவர்களை , தாய் பிள்ளைகளை பிரித்த உபயத்தை  செய்து முடித்தாகி விட்டாயிற்று

சோகம்(CHOGM) மா நாட்டில் கலந்து கொண்டது , மனித உரிமை குறித்த ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டினை விமர்சிக்க வைத்துள்ளது. இரண்டு மில்லியன் டாலர் செலவில் ஆயுதம் கொண்ட இரண்டு படகுகளை இலங்கைக்கு  தருவதாக வேறு வாக்களித்திருப்பது பலத்த விமர்சினத்தை உருவாக்கி உள்ளது.

பொது மக்கள்
எனது கொள்கையையே மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால்  ’சாமி கண்ணை குத்தும்’ என்று ஓரின திருமணத்துக்கு ஒப்புதல் வாக்கு அளிக்காமல் டபாய்த்தாகி விட்டது.
கடல் பூங்கா திட்டம் தொடர்பான சட்டங்கள், பள்ளி மாணவர் ஊக்க நிதி, சூப்பர் நிதி உயர்வு, ஓய்வூதியம் பெறுவோர்க்கான  நிதி ஆகியவற்றை மாற்றியது , 19,400 ஆக இருந்த வரி உயர் மட்டத்தையும் சிறு தொழில் சொத்து தொடர்பான சலுகைகளை அகற்றியது

அகதிகள்
ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ’நாமகரணம்’ நடந்தேறியது குடிவரவு அமைச்சகம், புதிய பெயருடன் ’குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு’ அமைச்சகமானது தான்.
’அக்கா வீடு எங்கே ஆத்துக்கு அப்பாலே’ என்ற தொனியில் ஆஸ்திரேலியா எல்லை எங்கே என்று தேடித் தேடி புற எல்லை அகதி நிர்ணயம் அறிமுகப்படுத்தப் பட்டது.
இது தவிர இந்த மாதம் முதல் புது கட்டளையாக ,  முறையில்லா நுழைவினை படகு மூலம் மேற்கொண்டவர் எவரும் தங்கள் குடும்பத்தை உடனடியாக அழைத்துக் கொள்வது சாத்தியமில்லாத அளவுக்கு கால தாமதப் படுத்தும்   கட்டளை  எண் 62 அமுலாக்கப் பட்டுளது. இதன் படி இதுவரை படகு மூலம் கரை தட்டிய  அனைவருக்கும் தங்களின் குடுபத்தினை  அழைக்கும் விசா கால வரையின்றி , தாமதிக்கும். இதுவரை தங்களின் குடுபத்தினை  அழைக்கும் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் இதே கதி தான்.
விண்ணப்பங்களை திருப்பி அழைப்பவர்களுக்கு கட்டிய பணம் திருப்பி தரப் பட மாட்டாது, விசா கிட்டவும்  அதிக (வருடங்கள்) காலம் எடுக்கும்.

நியாயமாரே மிச்சம் என்னதான் இருக்கிறது? 

No comments:

Post a Comment